Wednesday, March 31, 2010

Monitor முத்தமும் ஒரு thanglish கவிதையும்.


கணினி கடந்து
என்னை
தொட்டு விடவும்
நெருங்கி விடவும்
துடிக்கும் உன் தவிப்பு.

என்னோடு
மில்க் ஷேக்
பகிர்ந்து கொள்ளும்
பிரயத்தினத்தில்
பாழாய் போன
உன் கீ போர்ட்.

நீ வரைந்ததை
சரியான கோணத்தில்
அசையாமல் காட்டியபின்
நீ செய்யும்
அங்கீகார ஏக்க புன்னகை.

இப்படியான
virtual பரிமாற்றங்களில்
நீ தந்த
monitor முத்தங்களால்
ஈரமாகிறது
என் கன்னமும்
நம் உறவும்.

(என் அக்கா மகன் 4 வயது ஆதி கிட்ட இந்த கவிதைய அவன் வளந்த அப்புறம் படிச்சு காட்டாதீங்கplz!!!!!!)
ஓவியம்: ஆதித்யா

Tuesday, March 30, 2010

கருணையும் கொலையும்


இலைகள் மொத்தமும் உதிர்ந்த
மரத்தில் மிக வேகமாய்
பரவுகின்றன சில
அடர் பச்சை கொடிகள்.
மரம் மட்டும்
மௌனமாகவே நிற்கிறது
.

Thursday, March 18, 2010

சுற்றமும் நட்பும் சூழ. . .


திருமணங்களில் , காதல்
முடிய பெற்றவர்கள்
உதாரண காதலர்கள்
ஆகிவிடுகிறார்கள்.
காதலில் வென்றவர்கள்
என்று வாகை
சூடப் படுகிறார்கள் .
பிறருக்கு ஆலோசனை
சொல்ல தகுதி
உடையவர்களாய்
மாறி விடுகிறார்கள்.
அடிமனதில் அன்பை
புதைத்தவர்கள்
அமைதியாய்
கேட்டுக் கொள்கிறார்கள்.

Tuesday, February 16, 2010

அகத் தணல்


உறைந்த பணியில்
நடுங்கி கொண்டே
தேடுகிறேன் சில
முகங்களை.

நினைவுகளின் நீட்சியாய்
கனன்று கொண்டிருக்கும்
அகத் தணல்.

உருவங்கள் சிதைகபட்டு
பின் மெருகேற்றப்பட்டு
சில ஒப்பனைகளுக்கு பின்
மேஜை கடத்தப்படும்
உலர்ந்த உணர்வுகள்.

உறைந்த பணியில்
நடுங்கி கொண்டே
தேடுகிறேன் சில
முகங்களை.

படித்ததில் பிடித்தது


சிநேகிதிகளின் கணவர்கள்

மனுஷ்ய புத்திரன்

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

எப்போதும் உருவாகிவிடுகிறது

ஒரு சதுரங்கக் கட்டம்

ஒரு கலைக்கமுடியாத பாவனையின்

மர்ம நிழல்

ஒரு சர்க்கஸ் கோமாளியின்

அபாயகரமான சாகசங்கள்

ஒரு அபத்த வெளியில்

விரிக்கப்பட்ட வலை

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

என் சிநேதிகளின் கண்களை

முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்

அவளது ஆடையின் வண்ணங்களை

அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை

மறுதலித்துவிடுகிறேன்

அவளைப் பற்றிய ஒரு நினைவை

வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்

அவளது கணவனைப்போலவே

அவளது இருப்பை

ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகிதங்களில்

நாம் அனுமதிக்கப்படுவது

ஒரு கருணை

அது நம்மிடம் காட்டப்படும்

ஒரு பெருந்தன்மை

சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு

காட்டப்படும் பெருந்தன்மை

நாம் சந்தேதிக்கப்படவில்லை

என நம்மை நம்ப வைக்கும்

ஒரு தந்திரமான விளையாட்டு

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

என் சிநேகிதி எப்போதும்

பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்

பேசுகிறாள்

உரையாடல்களின்

அபாயகரமான திருப்பங்களை

பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்

எதைப் பற்றிய பேச்சிலும்

கணவரைப் பற்றிய

ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்

மிகவும் ஆயாசமடைந்து

கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது

நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களின் இடையே இருப்பது

ஒரு உறவல்ல

இலக்குகள் ஏதுமற்ற

ஒரு பந்தயம்

ஒரு அன்னியனுக்குக் காட்டும்

வன்மம் மிகுந்த மரியாதை

ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக

ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்

தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட

ஒரு மீன் முள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

நான் எனது பழக்கவழக்கங்களை

மாற்றிக் கொள்கிறேன்

அவர்களது எல்லா அக்கறைகளையும்

எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்

சிநேகிதிகளுடன் பேச

ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது

அவர்களின் கணவர்களுடன் பேச

ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன

சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

சிநேகிதிக்குப் பதில்

சிநேகிதியின் குழந்தைகளை

நேசிக்கக் கற்றுக் கொண்டேன்

எவ்வளவு குடிக்க வேண்டும்

ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்

நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்

எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்

என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்

நான் குழப்பமடைவதெல்லாம்

சிநேகிதியை பெயர் சொல்லாமல்

எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை

வெறும் பெயர்களாக மட்டும்

எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை

‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்

ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து

எப்படித் தப்பிச் செல்வது என்று

*

Tuesday, January 5, 2010

தலைப்பில் நீ இல்லை


என் படைப்புகளின்
கருப்பொருளாய்
உன்னை வைத்து
நீ தந்த காயங்களை
கொண்டாட விரும்பவில்லை நான் .
இப்படி எண்ணி கொண்டே
தொடங்குகின்றேன்.
இப்படி எண்ணி கொண்டே
முடித்தும் விடுகிறேன்.
கருப்பொருளாய் நீ மட்டும்
எஞ்சி நிற்கின்றாய்.

Friday, November 13, 2009

திட்டமிட்ட இலக்கியம்


இந்த பாதை வழி
இது என் முதல் பயணம்

நிற்கும் மனிதர்களும்
நகரும் படிகட்டுகளும்

தண்ணிரை போல் ் ஊர்ந்து கொண்டிருந்தது
பரபரப்பு .
விமானங்களின் ஓசையை
உரிந்து கொண்டிருக்கிறது
காத்திருப்பு அறையின்
கrண்ணாடிகள்.

நேற்றுக்கும் இன்றுக்கும்

இடைப்பட்ட ஏதோ ஒரு
காலப் பொழுதில்
எழுதி கொண்டிருக்கிறது
என் பேனா.

பிரான்க் போர்டில்

என் முன்றரை மணி நேர

காத்திருப்பில்

இவ்வளவு இலக்கியமே
சாத்தியம்
அல்லது
போதும்.