Wednesday, November 16, 2011

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ...




உற்று பார்த்து கொண்டிருந்தேன்
திரையில் தோன்றி மறைந்தன பெயர்கள்.
ஒன்றன் பின் ஒன்றாய்
வெவ்வேறு நீளத்தில் பல பெயர்கள்.
அடைமொழிகளுடன் சில
அடர்ந்த கைத்தட்டல்களோடு சில

திரைப்படம் துவங்கியது
இமை கவிழ்த்து
பார்வை விலக்கி
அமைதியாய் பார்க்க தொடங்கினேன்.

Thursday, September 29, 2011

கையோடு கொஞ்சம் வானம்.



கொஞ்சம் வானத்தை
சிறகோடு சுமந்து வந்தது
ஒரு வண்ணத்துபூச்சி.
வனத்தின் ஆகப்பெரிய
மலர் மீது வானத்தின்
வாசனையை தடவிவிட்டு
வந்த வேலை முடிந்ததென
சட்டென்று பறந்தது.

Wednesday, September 28, 2011

விட்டு பிரிகையில் ...


வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டு
வேலி கட்டி பாதுகாத்து
தண்ணீரோடு கண்ணீரும் உற்றி
பத்திரமாய் இருக்கும்படி
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்தான்.

ம்ம்..

நீ பிளாஸ்டிக் செடி
என்றறிந்த தருணத்தில்
மரணித்துவிட்டது எல்லாம்.

Friday, September 23, 2011

கவிஞனின் தூரிகை


என் கவிதைகளை
இனி வார்த்தைப்படுத்த
முடியுமென்று தோன்றவில்லை.

எண்ணங்கள் அனைத்தும்
பிம்பங்களாகவும் குறியீடுகளாகவும்
தோன்றி மறைகின்றன.

எண்ணங்களை வரைந்தேவிடலமேன்றலோ
தூரிகையிலிருந்து ஒரு சேர
வழிகிறது கண்ணீரும் காதலும் .
சொற்களோ கதவடைத்து விட்டன
வண்ணங்களோ போதா புரட்சி செய்கின்றன.

சொல்லாமலே விட்டு போய்விட்டாலும்
உன்னிடம் சொல்ல ஏதோ
இருந்ததென யூகித்துக்கொள்.

சில வானங்களுக்கு அப்பால்.....

நான் விட்டு வந்த
வெளி எல்லாம்
உன் வன்ம வார்த்தைகள்.
என் ஒற்றை
காலடி சுவடுகள் மேல்
உன் புதிய துணையின் கால் மிதிகள்.

சில வானங்களுக்கு அப்பால்
மொழி தெரியாத
கடல் யட்சனிடம்
மோட்சம் யாசிக்கிறேன் நான்.

நீ ஏனோ
உன் புதிய அடையாளங்களை
புதிய கண்ணாடிகளில்
தேடி கொண்டிருக்கிறாய்.

கொஞ்சம் நட்பேனும் மிச்சமிருந்திருந்தால்
உன்னை கண்ணாடிகளிடமிருந்து மீட்டு
சுய தேடலுக்கு
அறிமுகப்படுத்தியிருப்பேன்.


Friday, January 14, 2011

பனியோடு பெய்தது



மார்கழியில் வானை பிய்த்து கொண்டு வெண் மழை பெய்து கொண்டிருந்தது. பனி மணல் போல் சமனாகவும் அடர்த்தியாகவும் என் வாசலில் படர்திருந்தது. அதில் குருவி அல்லாத சற்றே பெரிய பறவை ஒன்றின் கால் தடம் தெரியவும் அதை பின் தொடர்ந்து சென்றேன். எனக்கு புரியாத மொழியில் பாடிக்கொண்டிருந்தது பறவை. அநேகமாய் இந்த பாடலாய் இருக்கலாம் என்று அனுமானிக்கிறேன்.

கடல் பறவை
ஒன்றிடம் காதல் வயப்பட்டேன்.

இலைகள் நிறம் மாறின .
இடம் பெயரும் காலம் வந்தது.
பல மைல் கடந்து
கூட்டத்தோடு புலம்பெயற
புறப்பட்டது பறவை.

புறப்பட சிறகு விரிக்கும் முன்
அலைகளில் சிறு தூரம்
கால் நனைத்து நடக்கையில்
கடைசியாய் ஒரு முறை
திரும்பி பார்த்திருக்கலாம் .

அங்கே தான் உட்கார்திருந்தேன் நான்
அந்த மரக்கிளையில்

இருப்பு பிரதான படும் பொழுது உணர்வுகள் பின் வாங்கி கொள்ளும் என்பது எல்லா உரியினங்களுக்குமான பொது விதி போலிருக்கிறது.
ம்ம், யாரிடமோ சொல்லாமல் விட்டதை என்னிடம் வந்து ஏன் பாடிவிட்டு போகிறது பறவை? அடுத்த முறை காலடி தடங்களை பின் தொடர்வதில்லை என்ற முடிவுடன் உள் வந்து கதவடைத்தேன். பாடல் மட்டும் துல்லியமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. எங்கே நகர்தலும் அதே துல்லியதுடுன் அதே தீர்கதுடன் கேட்டு கொண்டே இருந்தது. அனுமானங்களை வெளியில் வைத்து அடைத்தேனா என்று உர்ஜிதப்படுத்த வாசல் வந்து கதவு திறந்து பார்த்தேன். வீடு வெளியே இருந்தது.